கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு!

நல்லசாமி
நல்லசாமி
Updated on

கள் இறக்க அனுமதி கோரி 2024 ஜனவரி 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என கள் இயக்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கள் இயக்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கள் போதைப் பொருள் அல்ல. கள்ளை பற்றிய தவறான புரிதல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. கள் போதை பொருள் என்று எங்களோடு விவாதிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் தயாரா ? நாங்கள் தயார்.

கள் போதைப் பொருள் என்று தடை செய்யப்படும் அளவிற்கு என்ன காரணம். அதை எங்களிடம் விவாதித்து வெற்றி கண்டால் நாங்கள் தோல்விய ஒத்துக் கொள்கிறோம். இது புரிதலில் உள்ள பிரச்சனை. மீண்டும் சொல்கிறேன் கள் போதைப்பொருள் அல்ல, அது உணவின் ஒரு பகுதி.

காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டு இருக்க கூடிய நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இந்த நிலை தொடரும் ஆனால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி ஒரு சீட்டைக் கூட வெல்ல முடியாத நிலை ஏற்படும். கலைஞர் ஜெயலலிதா போன்றோர் விவசாயிகளை ஏமாற்றி விட்டனர்.

இந்த நிலையில் கள் இறக்க அனுமதி கோரி 2024 ஜனவரி 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறோம். பல அரசியல் கட்சிகள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு பருவநிலை மிகப்பெரிய அளவில் மாற்றங்களை சந்திக்க போகிறது என்று உலக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். தற்போது அதற்கான பல அசைவுகள் நடக்க தொடங்கி விட்டது. இயற்கையை நாம் பகைத்துக் கொள்ள தொடங்கி விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வரக்கூடிய ஆண்டுகளில் மழை பெய்யாமல் போகக்கூடிய நிலை ஏற்படும், அதேசமயம் தேவையற்ற இடங்களில் அதிகமான மழை பெய்யும் நிலையும் உருவாகும். இவை விவசாயிகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். தக்காளி, மஞ்சள், வெங்காயம் போன்ற உணவு பொருட்கள் விலை ஏற்றத்திற்கு இதுவும்  மிக முக்கிய காரணமாகவும். வெங்காயத்தினுடைய விலையேற்றம் 4 மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com