தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ம் தேதி அன்று தனது இரண்டு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, பெட்ரோனஸ், காட்டர் பில்லர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைச்சரவைக் கூட்ட ஆலோசனையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சென்னை வருகை மற்றும் மதுரை, திருவாரூரில் நடைபெற இருக்கும் விழாக்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
குறிப்பாக, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தவிர, ’முக்கியமான பொறுப்பில் அமைச்சர்களாகப் பதவி வகிப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகுந்த கவனமாகப் பேச வேண்டும்’ என்று முதல்வர் அமைச்சர்கள் அனைவரையும் எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.