இறந்தும் 4 பேருக்கு கண் தானம் செய்த இளம் மருத்துவர்

இறந்தும் 4 பேருக்கு கண் தானம் செய்த  இளம் மருத்துவர்

பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55). இவர் அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார். இவருக்கு வசந்தி (46) மனைவியும் பாலாஜி நாராயணன் (25) என்ற மகனும் , மைதிலி  (23) என்ற மகளும் உள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்து இந்தியா வந்து கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி, மருத்துவராக தேர்ச்சி பெற்றார் பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலாஜி சரவணன்.

கொரோனா காலங்களில் திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கொரோனா பாதித்த  நபர்களுக்கு டாக்டர் பாலாஜி சரவணன் மருத்துவ சேவை புரிந்துள்ளார்.

சிறிது காலம் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.

இந்நிலையில் டாக்டர் பாலாஜி மருத்துவ மேற்படிப்புக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக தனது வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலாஜியுடன் ரஷ்யாவில் ஒன்றாக மருத்துவம் படித்தவர் திலீப் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவரது 30-வது நாள் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள டாக்டர் பாலாஜி கடந்த 26 ஆம் தேதி பொள்ளாச்சியில் இருந்து தனியார் பஸ் மூலம் சென்னை, பல்லாவரத்திலுள்ள திலீப் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு துக்க நிகழ்வை முடித்துவிட்டு  சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மகன் அசோக் நாராயணன் வீட்டில் பாலாஜி நாராயணன் தங்கினார்.

கடந்த 28 ஆம் தேதி இரவு பொள்ளாச்சி திரும்புவதற்காக பஸ்ஸில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். பேருந்து நிலையம் செல்வதற்காக வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து லிப்டில் இறங்கி வந்து டூவிலரில் உட்கார்ந்த போது டாக்டர் பாலாஜி   அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.

அதன் பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை கொண்டு சென்று உடலை பரிசோதித்துப் பார்த்தபோது. பாலாஜி நாராயணன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பொள்ளாச்சியில் உள்ள அவரது தந்தை முரளிக்கு தெரியப்படுத்தப்பட்டது தகவலை கேட்ட முரளியின் மனைவி மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விரைந்து அவர்கள் மகன் பாலாஜி நாராயணன் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு பொள்ளாச்சி கொண்டு வந்து பாலாஜி நாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே பாலாஜி நாராயணன் தனது இரண்டு கண்களையும் தானம் செய்திருந்ததால் சென்னையில் உள்ள சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

மனிதனின் கண் கார்னியா பல அடுக்குகள் கொண்டது. குறிப்பாக பொள்ளாச்சியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரின் கண் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்ததால் கார்னியா வெளிப்புற அடுக்கு பாதிக்கப்பட்டவருக்கு எடுத்துப் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள அடுக்கை அறுவை சிகிச்சை செய்து அது பாதிக்கப்பட்ட இன்னொருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று இரண்டு கண்ணில் இருக்கும் வெளி மற்றும் உள்புற அடுக்களை எடுத்து நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

டாக்டராகி சிறு வயதிலேயே அகால மரணத்தை தழுவிய மருத்துவர் பாலாஜி நாராயணன் இறந்தும் நான்கு பேருக்கு கண் பார்வை கொடுத்து ஒளி கொடுத்து தெய்வமாக நிலைத்து நிற்கிறார் என்ற மன ஆறுதலுடன் இருப்பதாக பெற்றோர்கள் கண்கலங்கி தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com