

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு (AGM) முன்னதாக இந்த ராஜினாமா முடிவு வந்துள்ளது.பங்குதாரர்கள் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே உள்ள சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், டாடா குழுமத்தில் புதிய தலைவர் தேர்வுக்கான சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாகத் திகழும் டாடா குழுமம் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. ரத்தன் டாடா மறைவிற்குப் பிறகு அவரது சகோதரர் நோயல் டாடா உயர்மட்ட நிர்வாகத்தை கைப்பற்றிய நாளில் இருந்து பிரச்சனைகள் தொடர்ந்து வெடித்து வருகின்றது. இதன் நீட்சியாக டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ்-ன் சேர்மன் என். சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு குறித்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இவரின் பதவிக்காலம் பிப்ரவரி 2027 வரை இருந்தாலும் அடுத்த ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் டாடா குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் மீண்டும் இவர் டைரக்டராக நியமிக்கப்பட்டால் மட்டுமே சேர்மன் பதவியில் அடுத்த ஒரு வருடமாவது நீடிக்க முடியும். இல்லையெனில் இப்பதவியிலிருந்து விலக வேண்டி இருக்கும்.
இந்த நிலையில் தான் இவர் கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருப்பதை விட பதவி விலகி விடுவதற்காக தனது நெருங்கிய வட்டத்தில் உள்ள நபர்களிடம் ஆலோசனை செய்து இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
ஒரு பக்கம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் கூட்டம் நடக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், கூட்டம் நடந்தாலும் சந்திரசேகரன் அவர்கள் டைரக்டராக நியமிக்கப்பட்டு மீண்டும் அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக உள்ள நோயல் டாடா, சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு அதிரடியாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவரது ராஜினாமா முடிவை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளன.
இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் மற்றும் பல டாட்டா குழும நிறுவனங்களுக்கும் தலைவராகப் பணியாற்றுவதால் இவருடைய விலகல் அந்தப் பெருநிறுவனத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இவர் 2017 இல் பொறுப்பேற்றதில் இருந்து குழுமத்தின் வணிகங்களை மேற்பார்வை இடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
யார் இந்த சந்திரசேகரன்?
மறைந்த ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவர் இவர். இவரது தலைமையின் கீழ் டாடா குழுமம் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர். தமிழ் மீடியம் பள்ளியில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர். இவர் கோவை சிஐடி கல்லூரியிலும், திருச்சி ஆர்.இ.சி கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றவர். டிசிஎஸ் நிறுவனத்தை முன்னிலைக்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் 1987-ல் டாடா நிறுவனத்தில் இணைந்து 2009இல் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து பின்னர் 2017 முதல் டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத் தலைவராக இருந்து வந்தார்.
தனது ராஜினாமா பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் 40 ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்துள்ளேன். மிகவும் மதிப்பிற்குரிய இந்த நிறுவனத்திற்குப் பங்களிக்கும் வகையில் மிகுந்த மனநிறைவு தரும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக டாட்டா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், ஒரு முக்கிய பொறுப்பாகவும் இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். தான் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.