

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னை உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப ஆணையினை பிறப்பித்தும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு தடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் 23.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுத்தாக்கல் செய்தவர் தரப்பில், கோயில் வளாகத்தில் கோயில் நிதியை பயன்படுத்தி, வணிக வளாகங்களைக் கட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஆணையை பிறப்பித்துள்ளது. இந்த நீதிமன்ற ஆணையைமீறி பல திருக்கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுவருகிறது என குற்றம்சாட்டப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில் சர்சையில் உள்ள கோவில் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது எனவும் கூறப்பட்டது.
மேலும், இந்த கட்டிடங்கள் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாகவும் கட்டப்படும் வணிக வளாகங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வாடகை வருமானம் கிடைக்கும் எனவும் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாதி,பிரதிவாதி என இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதியளித்து ஆணையை பிறப்பித்தனர்.ஆனால், வணிக வளாகங்களில் அமைய இருக்கும் அந்தக் கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வணிக நோக்கங்களுக்காக அவைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர், இம்மனுவுக்கு வரும் நவம்பர் 22-ம் தேதிக்குள் உரிய பதிலளிக்க தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் ஆணையை பிறப்பித்தனர்.
மேலும்,வரும் காலங்களில் கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பவும் அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதிகள், உத்தரவிட்டனர். இந்த நீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.