

சட்டமன்ற தேர்தலில் போது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ,ஒரு கிராம் தங்க மோதிரம் அரசு சார்பில் அன்பளிப்பாக வழங்கப்படும், என்று தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று பெயர் வைத்திருந்தனர். தமிழகத்தில் தவெக கூட்டணி சார்பில் ஆட்சி அமைந்துள்ளதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர்.
புதிய ஆட்சி மக்கள் மனதில் நிற்குமாறு ஒரு சில புதிய திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் தங்கள் தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு இன்று மாலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மரபுகளை பேணும் வகையில் , புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் கொடுப்பது ஒரு வழக்கமாகும். வழக்கமாக பெண்ணின் உடன் பிறந்த சகோதரர்கள் இந்த முறையினை செய்வார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் , தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் தனது சகோதரிகளாக கருதி, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்மாமன் சீராக தங்க மோதிரம் ஒன்றை வழங்குவதைப் பற்றி பேசியிருந்தார்.
சகோதர அன்பின் அடையாளமாக தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புதிய குழந்தைகளுக்கு , பிறந்த உடனேயே ஒரு உயர்ந்த அன்பளிப்பு கிடைக்கிறது. இந்த திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்க இருக்கும் மகளிர்க்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் பயனாளியாக தகுதிகள்!
இந்த திட்டத்தின் படி பயன் பெறுபவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள் தமிழக அரசின் மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்த்திருக்க வேண்டும். தகுதியுள்ள ஒவ்வொரு தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கு தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கப்படும்.
வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் நிரந்தரமாக தங்காதவர்களுக்கு இந்த திட்டத்தின்படி அன்பளிப்பு வழங்கப்பட மாட்டாது. தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் ₹755.83 கோடி நிதியை இந்த திட்டத்திற்காக வழங்க உள்ளது.
இந்த திட்டத்தின் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவி சலுகைகள் எதுவும் தடுக்கப்பட மாட்டாது, அனைத்தும் தொடரும். இலவச பிரசவம் , ஊட்டச்சத்து அளித்தல் , குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கண்காணிக்கும் PICME (கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கண்காணிப்பு) மென்பொருள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் (ஜூன்.22) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி , அண்ணாவின் பிறந்த நாளான அன்று , தமிழக முதல்வர் ஜோசப் விஜயினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க மட்டுமல்ல , தமிழக மருத்துவமனைகளில் பொதுமக்கள் இலவச சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தினை முன்வைத்து செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனையை நோக்கி மக்கள் அதிகம் வருவார்கள். தனியார் மருத்துவமனையில் பிரசவம் போன்ற சேவைகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இதனால் அரசு மருத்துவமனை சேவையை பெறுவது சாதாரண மக்களின் பொருளாதார சுமைகளை குறைக்க உதவும்.