தலாய் லாமாவால் அடுத்த லாமாவாகப் பட்டம் சூட்டப்பட்டச் சிறுவன் இந்தியா வருகை!

தலாய் லாமாவால் அடுத்த லாமாவாகப் பட்டம் சூட்டப்பட்டச் சிறுவன் இந்தியா வருகை!

மார்ச் 8 ஆம் தேதி தர்மசாலாவில் நடந்த தொடக்க விழாவில் தலாய் லாமாவால் 10 வது கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சேவாக அபிஷேகம் செய்யப்பட்ட அமெரிக்காவில் பிறந்த எட்டு வயது மங்கோலிய சிறுவன், “துறவறப் படிப்பிற்காக இந்தியாவுக்கு வரலாம்” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தலாய் லாமாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, துல்கு (மறுபிறவிச் சிறுவன்) இப்போது திபெத்திய பௌத்தத்தின் ஜோனாங் பாரம்பரியத்தின் தலைவராகவும், மங்கோலியாவின் புத்த ஆன்மீகத் தலைவராகவும் உள்ளார். தற்போது பரம்பரை மற்றும் சிறந்த துறவற வசதிகள் காரணமாக அவர் இந்தியாவிற்கு ஆன்மிகப் படிப்பிற்காக வர வாய்ப்பு இருப்பதாகத் தகவல். ஒன்பதாவது கல்கா ஜெட்சுன் தம்பா சிம்லாவில் உள்ள ஜோனாங் தக்டென் ஃபன்ட்சோக் சோலிங் புத்த மடாலயத்துடன் இணைக்கப்பட்டது. ஜோனாங் மடாலயத்தில் உள்ள சில துறவிகள் கர்நாடகாவில் உள்ள முண்ட்கோடில் உள்ள ட்ரெபுங் மடாலயத்திலும் படிக்கின்றனர். இந்த மையங்களில் துல்கு தனது துறவறப் படிப்பை மேற்கொள்வது சாத்தியம்" என்று அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் பரவி வருகின்றன.

அந்த தகவல்களின்படி, 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த துல்கு, பிப்ரவரி மாதம் மங்கோலியாவின் மிகப்பெரிய கந்தன்டெக்சின்லென் மடாலயத்தில் நடந்த விழாவில் 10வது கல்கா (மங்கோலியாவின் மிகப்பெரிய மாவட்டம்) ஜெட்சன் தம்பா (புகலிடத்தின் இறைவன்) ஆக அபிஷேகம் செய்யப்பட்டார். விழாவில் மடத்தின் மடாதிபதி மற்றும் மங்கோலியாவின் உயர் லாமாக்கள் கலந்து கொண்டனர்.

தலாய் லாமா 2016 இல் உலன்பாதருக்குச் சென்றபோது மேற்கொண்ட பயிற்சியின் உச்சக்கட்டமாக மார்ச் 8 அன்று அவர் ஒன்பதாவது கல்கா ஜெட்சன் தம்பாவின் மறுபிறவியாக அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது,” என்று பெளத்த மடாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருவேளை துல்கு இந்தியா வந்தால் என்ன நேரும்?

"துல்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உராய்வின் சமீபத்திய சக்தி வாய்ந்த மற்றொரு புள்ளியாக மாறக்கூடும், கல்கா ஜெட்சன் தம்பா திபெத்திய பௌத்தத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்,” எனவே, அவரது மறுபிறவியாகக் கருதப்படும் துல்கு திபெத்திய பௌத்தத்தின் உரிமையையும் லாமாக்களின் மறுபிறவிகளையும் கோருவதற்கு ஆக்ரோஷமாக களமிறக்கப்படுவார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

எனவே, அவரது பாதுகாப்பு குறித்த கவலையும் பெளத்த மடாலய வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. "1995 இல் பஞ்சன் லாமாவாக பதவியேற்ற உடனேயே கெதுன் சோய்கி நைமாவுக்கு என்ன நடந்தது என்பதை இந்த உலகம் அறியும். எனவே தொடர்ந்து துல்குவின் பாதுகாப்பு குறித்து கவலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன" என்று மடாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சன் லாமாவாகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு கெதுன் சோய்கி நைமா சீன அதிகாரிகளால் கடத்தப்பட்டார், இன்றுவரை அவர் உலகின் இளைய அரசியல் கைதியாக இருக்கிறார். அவர் காணாமல் போய் 27 வருடங்கள் ஆகிறது. சோய்கி கடத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு சீன அதிகாரிகள் தங்கள் சொந்த பஞ்சன் லாமாவை அறிவிப்பதில் சிறிதும் காலம் தாழ்த்தவில்லை.

எனவே தலாய் லாமாவால் முன்மொழியப் பட்ட மங்கோலியச் சிறுவனின் இந்திய வருகை பற்றிய யூகங்கள் இந்தியா, சீனா இடையே ஒரு இறுக்கமான பதற்றத்தை நிலவச் செய்யும் என நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com