மனோவுக்காக உருகிய முதல்வர்!
இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. இவர், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இந்நிலையில், நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா உட்பட சினிமாத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டிப் பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது.
மனோபாலாவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.