தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்!

தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்!
Updated on

தி.நகர் பேருந்து நிலையதிலிருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடை மேம்பாலத்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மிகப் பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 கோடி செலவில் திட்டமிடப்பட்டது.

தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் தாமதம் ஆகியது. பின்னர், மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் தலா ஒரு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும். இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com