இராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதலமைச்சர் கோப்பை 2022 – 2023 ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால், அந்த விழா சற்று முன்னதாகத் தொடங்கப்பட்டு நடைபெற்றது.
அதனால் இது தொடர்பாக எம்.பி. நவாஸ்கனிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.
இந்த சமாதான முயற்சியின்போது, இரு தரப்பினரின் தள்ளுமுள்ளுவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை மாற்றி மாற்றி அவர்கள் தள்ளிவிட்டதில் ஆட்சியர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து கீழே விழுந்த ஆட்சியரை போலீசார் கைகொடுத்து தூக்கி அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறி அனுப்பி வைத்தனர்.