வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

கல்வியில் வன்னியர்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது +2 தேர்வு முடிவுகளின் மூலம் உறுதியாகி இருப்பதால் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார்

தற்போது வந்துள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மூலம் வன்னியர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். அதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்கி விட்ட நிலையில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தக் கோருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்கிறார்.

ப்ளஸ் டூ தேர்வில் முதல் 20 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்று கூட வட மாவட்டங்கள் இல்லை என்று கூறியுள்ள ராமதாஸ், இவற்றில் ஒன்று கூட தமிழ்நாட்டின் சராசரி தேர்ச்சி விகிதமான 94% விழுக்காட்டை எட்டவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது வந்துள்ள ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதங்களின் அடிப்படையில் கடைசி இடங்களைப் பிடித்த ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டை சேர்ந்தவை என குறிப்பிட்டுள்ளார்.

பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடிப்பது இது முதன்முறையல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன என கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலைக்கு முதன்மையான காரணம் வட மாவட்ட மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான் என்றும் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியர்களும், பட்டியல் சமுதாயத்தினரும் தான் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளி இறுதி வகுப்பு தேர்வு முடிவுகள் மூலம் சமூக, கல்வி நிலையில் வன்னியர்களின் மிக, மிக பிற்படுத்தப்பட்ட தன்மை உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள ராமதாஸ், வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com