

கேரளாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பரவச நிலையில் 'மாரியம்மா காளியம்மா' பாடலுக்கு ஆட்டம் போட்டதைத் தொடர்ந்து, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறை பகுதியில் கோவில் திருவிழா நடந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த திருவிழாவில் மாரியம்மா... காளியம்மா... என்ற தமிழ் அம்மன் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
இதையடுத்து, திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி, சீருடையில் இருந்த நிலையில், அந்த அம்மன் பாடலுக்கேற்றபடி சாமியாட்டம் ஆடியுள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இவர் ஆடிக்கொண்டிருந்ததை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வைரலாக, சீருடையுடன் சாமியாடிய எஸ்.ஐ. ஷாஜியை சஸ்பெண்ட் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது இவர் சாமி ஆடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.