‘நீட் தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டம் தொடரும்’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

‘நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்று காலை அந்த மாணவனின் தந்தை செல்வசேகரனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள அந்த மாணவனின் இல்லத்துக்குச் சென்று மாணவர் மற்றும் அவனுடைய தந்தை இழப்புக்கு உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ‘‘மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக் கூடாது. பொறுமை காக்க வேண்டும். பாஜக அரசு தவறான நிலைப்பாட்டில் உள்ளது. மாணவர் வாழ்க்கையோடு விளையாடுகிறது. தமிழ்நாடு ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய மாணவனின் தந்தையிடம் திமிராகப் பேசியுள்ளார். அது அவருடைய அறியாமை.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி ஆட்சியமைக்கும் பொழுது, ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார். அதனால் நீட் தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். அதுவரை மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். திமுக அரசு இரண்டு முறை சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான விலக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மேலும், நான் பிரதமரை சந்திக்கும்போது கூட இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தேன். மத்திய அரசு மாணவர்களின் மன நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்படும். அதற்காக திமுக சட்டப் போராட்டங்களைத் தொடரும்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உதயநிதி, ‘ஒரு செங்கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு போயிட்டாங்க. இது அயோக்கியத்தனமான செயல்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com