எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!

டைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பழனிசாமி. ‘இவர் தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் இவரது சொத்து விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தவறாகத் தெரிவித்திருப்பதால், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்குக் குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு,  இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சேலம் இந்தியன் வங்கிக் கிளையில் தனது கணக்கு குறித்த விவரங்களைக் கேட்டுப் பெற்றிருப்பதாகக் கூறி சேலம் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ஈரோட்டில் 1973 - 76ம் ஆண்டுகளில் தான் படித்த ஸ்ரீவாசவி கல்லூரிக்கு போலீஸார் கடிதம் எழுதி இருக்கின்றனர். இந்த வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இது குறித்த விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்பு செயல். எனவே, சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளையும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்த மனு குறித்து, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், சேலம் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் தங்களின் இந்த செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கக் கோரி, நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலம் குற்றப்பிரிவு காவல் துறையில் பதிவு செய்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணையை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, காவல் துறை விசாரணை நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com