2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பூசியை உருவாக்க உதவிய இரு மருத்துவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த பெண் உயிர் வேதியியலாளர் கேட்டலின் கரிக்கோ மற்றும் மருத்துவ அறிஞர் ட்ரு வீய்ஸ்மேனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அணுக்கரு சமிங்ஞை அடிப்படையிலான மாற்றங்களுடன் mRNA தடுப்பூசி கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மான் அறிவித்தார். ஹங்கேரியில் பிறந்த கேட்டலின் கரிக்கோ அமெரிக்காவின் பெனிசில்வேனியா பல்கலைகழகத்தில் பயின்றவர். தற்போது அவர் ஹங்கேரியின் சாகன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நோபல் பரிசு பெற்ற ட்ரு வீய்ஸ்மேன், மாசசூசெட்ஸ்-சில் பிறந்தவர்.
64 வயதான வீய்ஸ்மேன், பெனிசில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசியராக பணியாற்றி வருகிறார். கேட்டலின் கரிக்கோவும் வீய்ஸ்மேனும் இணைந்து பெனிசில்வேனியா பல்கலைகழகத்தில். 1990- ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். மெசஞ்சர் ஆர்என்ஏ எனப்படும் எம்ஆர்என்ஏ, ஒரு மூலக்கூறு ஆகும், இது செல்களை அவற்றின் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி புரதத்தை உருவாக்க வழிகாட்டும் எம்ஆர்என்ஏ மூலக்கூறு மனித செல்களுக்குள் நுழைந்ததும் ஆன்டிஜென்கள் எனப்படும் புரதங்களை உருவாக்குகின்றன.
மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு இவற்றை எதிர்கொள்ள, ஆன்டிபாடிகள் எனப்படும் பாதுகாப்பு அரண்களை உருவாக்குகின்றன இவை வைரஸ்கள் அல்லது பாக்டீரியா போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு போராடுகின்றன. பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கேட்டலின் கரிக்கோ மற்றும் ட்ரு வீய்ஸ்மேன் கண்டுபிடித்த இந்த எம்ஆர்என்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கின.
இவை உலகம் முழுவதும் பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றின. கொரோனா தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.