ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் இன்றே வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அதன் பிறகு திமுக ஆட்சியில் அக்டோபர் 19 ஆம் தேதி சட்ட மன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கிட்டதட்ட 131 நாட்களாக ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மார்ச் 8 ஆம் தேதி இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். மேலும் இதுகுறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று மீண்டும் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்ச் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு இரண்டாவது முறையாக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டாம் முறை சட்ட மன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பது விதியாகும்.

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக பெரும்பான்மையான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் இந்த ஒப்புதலை அளித்துள்ளார். “ ஆன்லைன் ரம்மியால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கான தீர்மானத்திற்கு நல்விளைவாக இன்று மாலை ஆளுநர் ஆன்லைன் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இந்த சட்டமானது இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com