குடி பழக்கமே இல்லாதவரை குடித்திருப்பதாகக் காட்டிய காவல் துறை இயந்திரம்!
NGMPC181

குடி பழக்கமே இல்லாதவரை குடித்திருப்பதாகக் காட்டிய காவல் துறை இயந்திரம்!

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் தீபக். இவர் வேலை விஷயமாகச் சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக் வந்த காரை மடக்கி உள்ளனர். பிறகு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு அவர் மது அருந்தி இருக்கிறாரா என்று சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தி இருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகித ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் போலீசார் கூறி உள்ளனர். இதைக் கேட்டு குடி பழக்கமே இல்லாத தீபக் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதையடுத்து அவர், ‘தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காவலர்கள் அதை காதில் வாங்காமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்து போடும்படி அவரை வற்புறுத்தி உள்ளனர். ஆனாலும், தீபக் தான் மது அருந்தவில்லை என்று தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு வந்து தீபக் குடித்திருக்கிறாரா என்று இரண்டு முறை சோதனை செய்துள்ளனர். அதில், ‘தீபக் மது அருந்தவில்லை. அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் உள்ளதாக அந்த இயந்திரம் காட்டி உள்ளது. அதைத் தொடர்ந்து தீபக்கை காவலர்கள் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையில் காவலர்கள் தீபக்குடன் கடுமையான வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், “இதுவரை இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. சென்னை காவல் துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளன. ஆனாலும் இதுபோன்று பிரச்னைகள் இதுவரை வந்ததில்லை. இந்தப் பிரச்னை குறித்து விசாரணை செய்யப்படும்” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com