காசா போர் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட போர் அமைச்சரவையை இஸ்ரேல் பிரதமர் கலைத்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 மாதங்களாக காசா இஸ்ரேல் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரினை கைவிட மறுக்கும் இஸ்ரேலுக்கு எதிராக, பல உலகநாடுகள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றன.
அதேபோல் சில நாட்டு மக்கள் தைரியமாக இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக ஒன்று திரண்டு கோஷம் எழுப்பி வருகின்றனர். இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவின் பல்கலைகழக மாணவர்கள்கூட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலர் கைது செய்யப்பட்டனர்.
மாலத்தீவு, உடனே இஸ்ரேல் நாட்டு மக்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும்படி கூறியது. இப்படி உலகநாடுகள் பலவழிகளில் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறிவிட்டது. நேற்று முன்தினம் சொந்த நாட்டு மக்களே ஒன்று திரண்டு பேரணியில் குதித்தனர். ஹமாஸ் அமைப்பிடம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் போட்டு அங்குள்ள பணயக்கைதிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட அந்நாட்டு மக்கள், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது நெதன்யாகுவை ராஜினாமா செய்ய கூறியும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதனிடையே, இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய போர் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அமைச்சரவை ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை வழி நடத்திச் செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி பென்னி கான்ட்ஸ் இந்த போர் அமைச்சரவையில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், இந்த போர் அமைச்சரவையை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், “காசா போரை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த போர் அமைச்சரவையை பிரதமா் நெதன்யாகு கலைத்துள்ளார். இனி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுப்பதற்காக, சிறிய அளவிலான ஆலோசனைக் குழுக்களை நெதன்யாகு அமைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என்றனர்.