தமிழ் நாட்டிலுள்ள ஆதீனங்கள் குழு செங்கோலுடன் டெல்லி சென்றது!

தமிழ் நாட்டிலுள்ள ஆதீனங்கள் குழு செங்கோலுடன்  டெல்லி சென்றது!
Updated on

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ் நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளு மன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப் பட உள்ளது. இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும், புதிய நாடாளு மன்ற கட்டடத்தில் தமிழ் நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும், அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கப் பட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப் பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு திருவாடுத்துறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட 12 பேர் சென்றனர். மேலும் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆதீனங்களை சேர்ந்த பாரம்பரிய இசை கலைஞர்களும் உடன் சென்றனர்.

நாடு சுதந்திரம் பெற்றதற்கான சமிஞ்சையான செங்கோலை மெளண்ட்பேட்டனிடமிருந்து பெற்றது திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே அந்த செங்கோல் பெறப்பட்டது என சொல்கிறார்கள் .

logo
Kalki Online
kalkionline.com