மாணவர்கள் கடன் தள்ளுபடியை தடை செய்த உச்சநீதி மன்றம்....தீவிர யோசனையில் ஜோ-பைடன்!

ஜோ பைடன்
ஜோ பைடன்

தேர்தல் பிரச்சாரத்தில் ஜோ பைடன் தாம் அதிபரானால் மாணவர்கள் கடனை தள்ளுபடி செய்வதற்கு வேண்டிய அனைத்தும் செய்யப்படும் என வாக்களித்திருந்தார். அவர் பிரசாரத்தில் மிகவும் முக்கிய வாக்குறுதியாக அனைவரையும் கவர்ந்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த போது இந்த தள்ளுபடி செல்லாது என அறிவித்து விட்டது. இதற்கு பைடன் மாற்று வழிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

அமெரிக்காவில் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கு வங்கிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் கடன் பெற்று படித்து வந்தனர். மந்தமான பொருளாதார சூழ்நிலையுடன் வேலையின்மை அதிகரித்து வருவதாலும், விலைவாசி உயர்வினாலும், இந்த கடன் மத்திய தர பொருளாதார வகுப்பினருக்கும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு, மிகப்பெரும் கவலையளிக்கும் சுமையாக சில வருடங்களாகவே நிலவி வந்தது.

ஜோ பைடனின் முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, பைடன் ஆகஸ்ட் 2022ல், கல்வித்துறையிடம் கடன் பெற்றவர்களுக்கு, வருடத்திற்கு தனிநபர் சுய வருமானமாக ரூ. 1,25,000 அமெரிக்க டாலர் அல்லது குடும்ப வருமானமாக 2,50,000 கிடைத்து இருந்தால், அவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

பெல் கிராண்ட் (Pell Grant) எனப்படும் மானியம் பெற்று பயின்றோர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்திருந்தார். கல்விக்கடன் தள்ளுபடியால் சுமார் 40 மில்லியன் மாணவர்கள் பயனடையும் நிலை இருந்தது.

ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த போது இந்த தள்ளுபடி செல்லாது என அறிவித்து விட்டதை தொடர்ந்து ஜோ பிடன் அளித்த வாக்குறுதியை காக்க தவறிவிட்டாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்து ஜோ பைடன் கூறியதாவது- குடியரசு கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் போலித்தனமே இதற்கு காரணம். கோவிட் தொற்று நோய் பரவல் காலத்தில் வியாபார நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை முழுமையாகவும் பகுதியாகவும், தள்ளுபடி செய்ய முடிந்தவர்களுக்கு உழைத்து வாழும் கோடிக்கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுவது பிடிக்காமல் அதற்கு எதிராக அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள்" என தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்கொள்ளும் விதமாக பைடன் மாற்று வழிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதன்படி, 1965 உயர்கல்விக்கான சட்டத்தின் வழியாக தீர்வு தேடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் கடனை கட்ட தவறும் பட்சத்தில் அவர்களின் கடன் வாங்கும் தகுதிக்கான தரம் (credit rating) வீழ்ந்துவிடும். இதனை தவிர்க்க, 12-மாதத்தில் கல்விக்கடனை அடைக்கும் விதத்தில் வழிவகை செய்யவும் அவர் ஆராய்வதாகவும் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com