10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியில் இருக்கக் கூடாது என்ற வாதத்தையும் முன் வைத்தனர். தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

reservation
reservation

இதனைத் தொடர்ந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதனை விசாரித்த நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் செல்லாது என அறிவித்தனர்.

விசிக, அகில இந்திய சமூக நீதி பேரவை உள்ளிட்ட பலர் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com