பசியால் வாடும் பாலஸ்தீனியர்களை கைவிட்ட ஐ.நா!

பசியால் வாடும் பாலஸ்தீனியர்களை கைவிட்ட ஐ.நா!

ஆசியக் கண்டத்தில் அரசியல் ரீதியாகவும் பூலோக ரீதியாகவும் முக்கிய நாடாகக் கருதப்படும் பாலஸ்தீனத்திற்கு ஐ.நா சபையின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்கள் அடுத்த மாதம் முதல் 60 சதவீதம் வரை நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பு காரணமாகப் பாலஸ்தீனத்தில் பல்லாண்டு காலமாக நீடித்துவரும் போர் மற்றும் ஓய்வில்லாமல் தொடர்ந்துவரும் உள்நாட்டு அரசியல் கலவரம் காரணமாக அந்நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்கியே பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.

இதன்காரணமாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீனத்தில்  தொடர் போர் பதற்றம் காரணமாகக் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவிவருகிறது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் தரவுகள் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது.  குறிப்பாகப் பதற்றம் நிறைந்த காசா பகுதியைச் சுற்றியுள்ள 63 சதவீதம் பேர் கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 சதவீதமான பெண்களுக்கு போதுமான உணவு, தண்ணீர்கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு ஐ.நா. சபையின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 1991ம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்தில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரேஷன் முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அடுத்த மாதம் முதல் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களின் அளவில் 60 சதவீதம் குறைக்கப்படவுள்ளதாகப்  பாலஸ்தீனத்துக்கான ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநர் சமர் அப்தெல் ஜாபர் (Samer Abdel Jaber) Samer Abdel Jaber தெரிவித்துள்ளார்.

இதனால் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் ஐ.நா சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவு பொருள் மற்றும் ஒரு நபருக்கு டாலர் மதிப்பில் வழங்கப்பட்டு வந்த $10.30 மதிப்புள்ள மாதாந்திர வவுச்சர்கள் வழங்கும் திட்டமும் நிறுத்தப்படவுள்ளது.பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதியான காசா கடந்த 2007ம் ஆண்டு  முதல் இஸ்லாமிய ஹமாஸ் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கு 25 லட்சம் மக்கள் வசித்துவருகிறார். இவர்களில் 45 சதவீதம் பேர்  வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதால் 80 சதவீத குடும்பங்கள் பேர் ஐ.நா போன்ற சர்வதேச உதவியை நம்பியிருக்கிறார்கள் எனப் பாலஸ்தீனம் மற்றும்  ஐ.நாவின் தரவுகள்  தெரிவிக்கின்றன.

KHALIL HAMRA

அதேநேரம், ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாகக் காசா மற்றும் மேற்குக் கரையில் வசித்துவரும்  1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் இவர்கள் அடிப்படையான உணவு உதவியை நம்பியிருக்கிறார்கள் என்றும்  இவர்களைப்போல் கடுமையான உணவு தேவையை நம்பி உள்ளவர்களுக்கு ஐ.நா. உணவு உதவி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் மீதமுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத மற்றும் கடினமான முடிவு என தெரிவித்துள்ளார் சமர் அப்தெல் ஜாபர்.

அதேபோல் கடும் நிதி நெருக்கடி தொடர்ந்தால் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டுவரும் உணவு மற்றும் நிதியுதவி ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுவதுமாக நிறுத்துவதற்கான கட்டாயத்திற்கு ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டம் தள்ளப்படும் எனவும் சமர் அப்தெல் ஜாபர் எச்சரித்துள்ளார்.

ஐ.நா.சபையின் இந்த கடுமையான முடிவால் ஏற்கனவே போர் மற்றும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை மேலும் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களின்போது துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்குப் பலியாகி வந்த மக்கள் தற்போது பசி,பட்டினியால்இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் பாலஸ்தீனர்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com