டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு அணைக்கு வந்தது!

டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு அணைக்கு வந்தது!

மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது . இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 1,900 கனஅடி நீர் வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.

காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது.

அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்புக்கு திறந்துவிடப்பட்டது. அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது.

மாலையில் பெட்டவாய்த்தலைக்கு வந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக் கொம்புக்கு நேற்று இரவு சரியாக 8.30 மணியளவில் வந்தடைந்தது. அதன்பிறகு முக்கொம்பில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.

கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com