‘சம வாய்ப்பு வழங்காத நீட் தேர்வு தேவையில்லை‘ அன்புமணி ராமதாஸ்!

‘சம வாய்ப்பு வழங்காத நீட் தேர்வு தேவையில்லை‘ அன்புமணி ராமதாஸ்!

‘மருத்துவத் தகுதித் தேர்வான, ‘நீட்’டில் சாதனை படைத்த மாணவர்களின் குடும்பப் பின்னணி குறித்த ஆய்வில், நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாத ஒன்று என்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, அனைவருக்கும் சம வாய்ப்பற்ற சிபிஎஸ்இ பாடமுறைக்கு சாதகமான நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது என்ற எங்களின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. நடப்பு 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து, பிரபல நாளிதழ் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. அவர்களில் 38 மாணவர்களை தொடர்பு கொண்ட அந்த நாளிதழ், அவர்கள் படித்த பள்ளி, கல்வி வாரியம், நீட் தேர்வுக்காக பெற்ற பயிற்சி போன்ற விவரங்களை சேகரித்து உள்ளனர். அந்தப் பட்டியலுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு மாணவர் பிரபஞ்சன் குறித்த விவரங்களையும் சேர்த்தால் 39 சாதனை மாணவர்களின் விவரங்கள் உள்ளன. இந்த 39 மாணவர்களில் ஒருவர் கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள் கிடையாது. அவர்களில் 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள்; ஐவர் ஆந்திர மாநில பாடத்திட்ட பள்ளிகளிலும், மூவர் மராட்டிய மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளிலும், இருவர் மேற்கு வங்க மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளிலும் படித்தவர்கள்.

அதைப்போலவே, அந்த 39 பேரில் 29 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதி மாணவர்கள். 8 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். பிற வகுப்பினர் எவரும் இதில் இல்லை. இந்த 39 பேரில் 38 பேர் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், ஆகாஷ் ஜூன் என்ற அந்த மாணவர், தில்லியின் புகழ்பெற்ற தில்லி பொதுப்பள்ளியில் படித்தவர். நீட் தேர்வில் சாதித்த 39 மாணவர்களும் தில்லி, புனே, சென்னை, கொல்கத்தா, நாக்பூர், கோட்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அதோடு, அனைவருமே பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த புள்ளிவிவரங்கள் 39 மாணவர்களைப் பற்றியது என்றாலும், நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேரும் அனைவருக்கும் இது பொருந்தும்.

இதிலிருந்து நீட் தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது இரு ஆண்டுகளாவது சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதியுள்ள குடும்ப மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது என்பதை உணர முடியும். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடியவர்கள். அவர்கள் படிக்கும் பள்ளிகளில் அறிவியல் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களும் இருக்க மாட்டார்கள்; தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்ல அவர்களுக்கு வசதியும் இருக்காது. இப்படிப்பட்ட எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மாதிரியாக நீட் தேர்வை எழுத வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்? ஆமைகளும், முயல்களும் எவ்வாறு ஒரே போட்டியில் பங்கேற்க முடியும்? இதில் சம வாய்ப்பு எங்கு இருக்கிறது?

‘12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்போது, மருத்துவப் படிப்புக்கு எதற்காக தனி நுழைவுத்தேர்வு?’ என்ற வினாவை எழுப்பியபோது, அதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, ‘வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. அந்தப் பாடத்திட்டங்களின்படியான மதிப்பீடு வேறுபடும் என்பதால் ஒரே மாதிரியான மதிப்பீட்டிற்காகத்தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது’ என்று கூறியது. மருத்துவம் படிக்க வருவோர் அனைவரும் ஒரே மாதிரியான அளவுகோலால் அளவிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரி என்றால், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதுதானே சரியானதாக இருக்கும்? அவ்வாறு இல்லாமல் வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கு போட்டி நடத்தினால், கல்வி வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் சிறந்தவர்கள்தானே வெற்றி பெறுவார்கள்? இது எந்த வகையில் சமூக நீதியாகவும், சம நீதியாகவும் இருக்கும்? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காத, சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட, தனிப்பயிற்சி பெறும், நகர்ப்புற, பணக்கார, உயர் வகுப்பினருக்கு சாதகமாக இருக்கும் நீட் தேர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. எனவே, நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் சம வாய்ப்பற்ற நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com