

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசினார் விசிக தலைவர் திருமாவளவன். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஆட்சி அமைப்பதற்கு தமிழக ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் கேட்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி திமுக தலைவருடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தாமாகவே தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர். பாலு, ஆர் ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் சண்முகம், சிபிஐ வீரபாண்டியன் ஆகியோர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினர். ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.