திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால் இன்று இலவச தரிசன டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறை அதிகரிக்கப்பட்டதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
நேற்று முன் தினம் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பகதர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் 10 கிலோ மீட்டர் நீள வரிசையில் 48 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து விடுமுறை தினமான நேற்று இலவச டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோன்று, வருகின்ற 7, 8, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் அக்டோர் 2ஆம் தேதியான இன்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் தொடர்ந்து திருப்பதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், இன்றும் இலவச தரிசன டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது