கள்ளச் சாராயத்தை விட, அரசு விற்கும் மதுவால் இறப்பவர் ஆயிரம் மடங்கு அதிகம்: அன்புமணி குற்றச்சாட்டு!

கள்ளச் சாராயத்தை விட, அரசு விற்கும் மதுவால் இறப்பவர் ஆயிரம் மடங்கு அதிகம்: அன்புமணி குற்றச்சாட்டு!

ரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று மாலை வரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மாலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தச் சம்பவத்தை அரசின் தோல்வியாக நான் பார்க்கிறேன். மதுவிலக்கை அமல்படுத்த பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கள்ளச் சாராயத்தை தடுக்க இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறை, வருவாய்துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்குத் தெரியாமல் கள்ளச் சாராயத்தை ஒரு சொட்டுக் கூட விற்க முடியாது. தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியதற்கு காரணமே கள்ளச் சாராயத்தை நிறுத்தியதால்தான். ஒரு பக்கம் கள்ளச் சாராயம், மற்றொரு பக்கம் உரிமம் பெற்று விற்கும் சாராயமாகும். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மதுவினால் தமிழகத்தில் ஐந்து லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்.

தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மது குடிக்காமல் வாழவே இயலாது என்ற சூழலில் மீனவர்கள், விவசாயிகள் , கூலி தொழிலாளிகள் உள்ளனர் என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கியுள்ளது. ஒருவர் டாஸ்மாக் மதுவை குடிக்கவேண்டும் என்றால் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஆனால், கள்ளச் சாராயத்துக்கு 50 ரூபாய் செலவிட்டால் போதும். தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் மதுவை மக்களிடம் திணிக்கிறார். அரசு இயந்திரத்தின் மூலம் மது திணிக்கப்படுகிறது. சமூக அக்கறை இல்லாத மதுவிலக்குத் துறை அமைச்சரை மாற்ற வேண்டும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டும். இந்தத் தலைமுறை மது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையை திராவிடக்கட்சிகள் உருவாக்கியுள்ளது.

தமிழக அரசு மதுவிலக்கு தொடர்பாக என்ன செய்யப்போகிறது என்பதை விளக்க வேண்டும். உணர்வுபூர்வமாக மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் விரும்பத்தகாத விஷயங்களுக்கு காரணம் மதுதான். கள்ளச் சாராயத்தை விட, அரசு விற்கும் மதுவால் இறப்பவர் ஆயிரம் மடங்கு அதிகம். தமிழகத்தில் இருபத்திநான்கு மணி நேரமும் சந்துக்கடைகளில் எல்லாம் மது கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இது மிகப் பெரிய ஊழலாகும். எல்லாம் நடந்த பிறகு நேரில் வந்து முதல்வர் பார்ப்பதில் பயனில்லை. நடக்காமல் தடுப்பதுதான் அரசின் கடமையாகும்.

தமிழகம் மற்றும் ஜிப்மரில் கூட Methyl alcohol poisoning antidote என்ற மருந்து இல்லை. அது இருந்திருந்தால் நிறைய உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். அந்த மருந்து வெளிநாடுகளில் உள்ளது. தமிழகத்தில் சாராயம் இருக்கக் கூடாது என்று முதல்வர் கூறியிருந்தால், மதுவிலக்குத் துறையை எனது கண்காணிப்பில் விடுங்கள். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவேன்” என்று அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com