இந்திய பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றிருந்த நிலையில், இணையத்தில் மாலத்தீவு என்ற வார்த்தை ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது மாலத்தீவை புறக்கணிப்போம் என்பது ட்ரெண்டிங்கில் உள்ளது.
மாலத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகம். 2023ஆம் வருடத்தில், 18.78 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்தனர். அதில் 2.09 இலட்சம் இந்தியர்கள். மாலத்தீவிற்கு சுற்றுலா வரும் பயணிகளில் இந்தியா முதலிடம் வகுக்கிறது. “மாலத்தீவைப் புறக்கணிப்போம்” என்ற கோஷத்தைத் தொடர்ந்து, இதுவரை 7500 ஹோட்டல் பதிவுகளும், 2300 விமான டிக்கட்களும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. மாலத்தீவின் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்தது. அண்டை நாடு, அழகான கடற்கரை என்று இந்தியர்கள் விரும்பிச் செல்லும் இடமாக இருந்தது.
நம்முடைய நாட்டின் ஒரு பகுதியான லட்சத்தீவிற்கு அரசு முறையில் பயணம் செய்த நமது பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் அங்கு சென்ற இடங்களில் எல்லாம் புகைப்படங்கள் எடுத்து அதனை அவருடைய சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பலரும் கூகுளில் லடசத்தீவைப் பற்றித் தேட ஆரம்பித்தனர். பிரதமரின் இந்த செயல், லட்சத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை அதிகரிக்கும் என்றும், அது சீனாவின் கைப்பாவையான மாலத்தீவிற்கு பேரிடியாக இருக்கும் என்று சின்ஹா என்பவர் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த மாலத்தீவு பாராளுமன்ற உறுப்பினரின் பதிவு இந்தியாவில் பலத்த எதிர்ப்பைக் கிளறி விட்டுள்ளது.
மாலத்தீவு அரசு “இது சிலரின் தனிப்பட்டக் கருத்து. அரசின் கருத்தல்ல” என்று அறிக்கை அளித்துள்ளது. மாலத்தீவின் முந்தைய குடியரசுத் தலைவர் முகமது நஷீத், மாலத்தீவு மந்திரின் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். முன்னதாக மாலத்தீவு அரசு, அவதூறான கருத்து தெரிவித்த மரியம் ஷியுனா, மல்ஷா ஷெரீப் மற்றும் மஹ்சூம் மஜித் என்று மூன்று மந்திரிகளை பதவி இறக்கம் செய்தது என தகவல் வெளியானது. ஆனால், அமைச்சர்கள் பதவி இறக்கம் எதுவும் செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.