சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் கோடை தொடங்கி விட்டதாகத்தான் தோன்றுகிறது. மார்ச் மாதத்தின் நடுவிலேயே இப்படி உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறதே இனி ஏப்ரல், மே மாதங்களில் நம் நிலைமை என்ன என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். கவலைப் படாதீர்கள்.

உங்கள் எண்ணத்தை ஈடேற்றும் விதமாக காலநிலையை சற்றே குளுமையாக்க தமிழகத்துக்கு மழை வரப்போகிறதாம்.

தமிழ்நாட்டின் வட உட்பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 17 முதல் 19 வரை தமிழகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மின்னல் வெட்டும் போது திறந்த வெளியில் நிற்கக் கூடாது, பச்சை மரங்கள் மற்றும் உலோகம் சார்ந்த கட்டமைப்புகளின் கீழ் அல்லது அருகாமையில் நிற்கக் கூடாது. அச்சமயங்களில் திறந்த வெளி நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை அச்சமயங்களில் திறந்த வெளியில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் பொதுமக்கள் இடி, மின்னலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள குதிகால்கள் இணைத்து, தரையில் தலைகுனிந்து அமர்ந்து கொள்ள வேண்டும். இப்படி அமர்வதால் மின்னலின் தாக்கம் குறையும் என்கிறார்கள்.

இப்படி பொதுமக்களை இடி மற்றும் மின்னலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இன்றே சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com