

சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த தவெக நாளை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்க இருக்கும் நிலையில் தற்போது தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் சென்னை விசிக தலைமையகத்தில் ஆலோசனை நடத்தி வரும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை தந்துள்ளது.ஏற்கனவே இது குறித்து தவெக-வின் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிமுகவின் ஓரு தரப்பினரான சி.வி சண்முகம் தரப்பினருடன் தோழமை உணர்வுடன் பயணிப்போம் என கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், “இன்று மாலை அல்லது நாளை கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி, இந்த அழைப்பை குறித்து விரிவாக ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், த.வெ.கவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மே 8 ஆம் தேதி கூடிய விசிக உயர்நிலைக் கூட்டத்தில், பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்றார்கள். இறுதியாக தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். மறுநாள் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சரவையில் இடம்பெறாமல் நிபந்தனையற்ற ஆதரவு தர முடிவெடுத்தோம்.முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு வேளச்சேரிக்கு வருகை தந்த விஜய், அவரது விருப்பத்தை தெரிவித்தார். தற்போது ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்துள்ளார். இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவை அறிவிப்போம் என்றார்.இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இடதுசாரிகள் மற்றும் திருமாவளவன் எதிர்ப்பால் சி.வி சண்முகம் தரப்பிற்கு தவெக அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது எனலாம்.
மேலும் மக்களின் தீர்ப்புக்கு எதிராக பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக முயன்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கொள்கைகளை மறந்து முக ஸ்டாலின் உடனும் உதயநிதியுடனும் அதிமுக ஆட்சி அமைக்க குதிரை பேரம் நடத்தியதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டையும் சுமத்தினார்.
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காலூன்றி நிற்கும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவை விட குறைவான இடங்களை பெற்று திமுக எதிர்க்கட்சி ஆக தற்போது செயலாற்றி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் சி. வி சண்முகம் தரப்பினரிடையே எழுந்த பிரச்சினை காரணமாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரு தரப்பாக பிரிந்து சி. வி. சண்முகம் தரப்பினர் சட்டசபையில் தவெகவிற்கு ஆதரவு தந்தனர். தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற மும்முரமாக முயன்று வந்த நிலையில் அதிருப்தி அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் பதவி தர கம்யூ., விசிக கடும் எதிர்ப்பால் தவெக பின்வாங்கியது.
தவெக எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவு அத்தரப்பினருக்கு அதிர்ச்சி அளிக்கும் என்பது நிஜம்.