நவி மும்பையில் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

திருப்பதி கோயில்
திருப்பதி கோயில்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகம் முழுவதும் பக்தகோடிகள் உண்டு. ஆண்டுதோறும் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் திருப்பதி மலையில் வந்து குவியும் கணக்கற்ற பக்தர்களே இதற்கு சாட்சி. ஏழுமலையானின் மகிமையைத் தேடி ஆந்திராவுக்குத் தான் வர வேண்டும் என்பதில்லை இனி அவரவர் மாநிலத்திலேயே திருப்பதி பாலாஜியின் அருளைப் பெற்றுக் கொள்ள ஆவண செய்ய வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது.

அதற்கான முன்னெடுப்பாக நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது.

முன்னரே நாட்டின் சில பிரதான நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கிளைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அப்பணியின் தொடர்ச்சியாக மஹாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவிருக்கும் ஏழுமலையான் கோயிலுக்கான பூமி பூஜை நேற்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

அதற்கான விழாவில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

நவிமும்பை, உல்வேயில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 ஏக்கர் நிலத்தில், ஏழுமலையான் கோயிலை இலவசமாகக் கட்டித் தரும் பணியை ரேமண்ட் நிறுவனத் தலைவர் சிங்கானியா ஏற்றுக்கொண்டுள்ளார். ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இயலாமல் தவிக்கும் மும்பை வாழ் பக்தர்களுக்கு இது மிகச்சிறந்த வரப்பிரசாதமாக அமையும், அத்துடன் இதன் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும் என்று கூறிய கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையாக அடுத்து வரும் 2 ஆண்டுகளில் முடித்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுவரையிலும் இந்தியாவில், கன்னியாகுமரி, சென்னை, ஹைதராபாத், புவனேஸ்வர், புதுடெல்லி, ஜம்மு & கஷ்மீர் உள்ளிட்ட 6 இடங்களில் ஏற்கனவே ஏழுமலையான் கோயில்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் ஜம்மு & கஷ்மீரில் கட்டப்பட்ட கோயிலுக்கு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com