திருப்பூர் ஆடை விற்பனை பாதிப்பு: இறக்குமதியை கட்டுப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை!

மாதிரி படம்
மாதிரி படம்
Updated on

லகின் பல்வேறு நாடுகளுக்கு பனியன் வகை ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வர்த்தக மையமாக விளங்குவது திருப்பூர். திருப்பூர் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள்  பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம்  லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

மேலும் உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், நாட்டின் வருமான ஆகியவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் ஆடை வர்த்தகம் மிகப்பெரிய அளவில் குறைந்து இருப்பதாகவும், இந்த நாள் ஆண்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பூர் தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலகின் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சிகளுக்கு உதவுவதற்காகவும், உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்பை மேம்படுத்துவதற்காகவும் வரியில்லா ஒப்பந்தத்தில் இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. இதன் மூலம் இந்தியாவிற்கு அருகாமை நாடுகள் மற்றும் சிறிய நாடுகள் பயனடைய வழி ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி வங்கதேசத்திலிருந்து ஆடை இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியது. ஆடை இறக்குமதி அதிகரிப்பதால் உள்ளூர் சந்தையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கவுன்டர் வெய்லிங் என்ற எதிர் விளைவுகளை தடுப்பதற்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் இறக்குமதி குறைக்கப்பட்டது.

இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கவுன்டர் வெய்லின் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆடையினுடைய விற்பனை மிகப்பெரிய அளவில் சர்வை சந்தித்திருக்கிறது. உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருப்பதாக திருப்பூர் தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் வங்கதேசம் கடந்த நிதி ஆண்டியின் 11 மாதங்களில் மட்டும் 1057 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது 113 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளுடைய வர்த்தகம் குறைவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மீண்டும் கவுன்டர் வெய்லிங் எதிர்வினை வரியை அமல்படுத்த வேண்டும் என்று தொழில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com