

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வினை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும் 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20-ம்தேதி) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம். இதற்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள ‘SSLC Class 10th Result 2026’ என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதியை (DD/MM/YYYY) பதிவிட வேண்டும். விவரங்களைச் சரிபார்த்துவிட்டு கெட் மார்க்ஸ் 'Get Marks' அல்லது சமர்பித்தல் 'Submit' என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் மதிப்பெண் பட்டியல் திரையில் தெரியும். இதன் மூலம் உங்கள் ரிசல்டை பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மாணவர்கள் 7845252525 என்கிற வாட்ஸ்அப் எண் மூலமாகவும், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள் 14417 / 104 / 14416 மூலமாகவும் உங்கள் ரிசல்டை பார்க்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இணையதளங்கள் மட்டுமின்றி, பள்ளிகள், பள்ளி கல்வித்துறையின் மொபைல் செயலி மற்றும் DigiLocker மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.