

சட்டமன்றத்தில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய போது , மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விவாதங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. மகளிர் உரிமைத்தொகை தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. ஒவ்வொரு கட்சியினரும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி தருவதாக கூறி வாக்கு சேகரித்தனர். தேர்தலை முன்னிட்டு முந்தைய திமுக அரசு 5 மாத உரிமைத் தொகையை சேர்த்து ₹5000 ஆக வழங்கி இருந்தது.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து ஆளுநர் தலைமையில் நேற்று முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மறைந்த திரைத்துறையை சார்ந்த பிரபலங்களான இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் ஆர்பி.சவுத்ரி, கே.ராஜன் உள்ளிட்டோர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அடுத்ததாக சட்டமன்றத்தில் , கர்நாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேகதாது அணையை நிறுத்த கோரி, முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம் ஒன்றை வாசித்து ஒருமனதாக நிறைவேற்றினார். பின்னர் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தொடங்கியது. விவாதத்தின் போது பங்கேற்று பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் புதிய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்று கேள்விகளை எழுப்பினார்.
திமுக அரசின் ஆட்சி காலத்தில் முதன்முறையாக மழையில் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி 60 வயதிற்கு உட்பட்ட மகளிர்களுக்கு, குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மாதம் தோறும் ₹1000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை மேம்படுத்தி தமிழக வெற்றி கழகம், தங்களது ஆட்சியில் மகளிர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹2500 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
புதிய அரசு ஆட்சி அமைத்து ஒரு மாத காலத்தை தாண்டியும் இதுவரை மகளிர்களுக்கு ₹2500 வழங்கப்படவில்லை. இதுகுறித்து எந்த ஒரு தெளிவான அதிகாரத்துறை அறிவிப்பும் வெளியாகவில்லை , எப்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று? சம்பத் குமார் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஒரு விளக்கத்தை அளித்தார். "மகளிர் உரிமை தொகையை ₹2500 ஆக வழங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் முக்கிய வாக்குறுதியாகும். தற்போது தமிழக அரசு அரசு நிதிநிலைகளை ஆராய்ந்து மறுசீரமைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. தற்போது சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் , மாண்புமிகு உறுப்பினர்கள் இந்த நேரத்தில் ஆளுநர் உரையில் உள்ள கருத்துக்களை குறித்து மட்டுமே தங்களது விவாதங்களை மேற்கொள்ளவும் , அது தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யவும்.
மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி ரூ.2,500 ஆக வழங்கவும் , இந்த திட்டத்தில் புதிய பயண பயனாளிகளை இணைப்பதும் குறித்த விரிவான திட்ட வரைவுகள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து அடுத்து வர இருக்கும் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை விவாதங்களின் போது பேசலாம்" என்று அவர் கூறினார். இதனால், விரைவில் மகளிர் உரிமைத் தொகை ₹2500குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.