
சமூகத்தில் மிகவும் வறுமை நிலையில் சிக்கி தவிக்கும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தாயுமானவர் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்த அன்பு கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து, அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதாகும்.
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், 18 வயது நிறைவடையும் வரை, மாதந்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை, குழந்தைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பள்ளி படிப்பை முடித்த பிறகு, அவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும். இந்த சிறப்பு திட்டம், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
”அன்புக் கரங்கள்” திட்டம் - யார் யார் விண்ணப்பிக்கலாம்?
1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)
3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத் திறன் கொண்டவராக இருந்தால்) (Physically/mentally challenged)
4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)
எப்படி விண்ணப்பிப்பது?
‘அன்புக் கரங்கள்’ திட்டத்திற்கு விண்ணப்பிக்க, உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் அணுகலாம்.
விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள்:
குடும்ப அட்டை நகல்
ஆதார் அட்டை நகல்
குழந்தையின் வயது சான்று
குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்