

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கியது. இதில் செய்முறை தேர்வுக்கு தலா 20 மதிப்பெண்களும், அகமதிப்பீட்டிற்கு 10 மதிப்பெண்களும் என மொத்தம் 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 70 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். இதனிடையே இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதியை கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 2ம் தேதி தமிழ்,
மார்ச் 5 -ஆங்கிலம்,
மார்ச் 9- வேதியியல், கணக்கியல், புவியியல்,
மார்ச் 13 -இயற்பியல், பொருளாதாரம்,
மார்ச் 17 -கணிதம், விலங்கியல், வணிகம் நடைபெறும்.
மார்ச் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளி விவரங்கள்,
மார்ச் 26 -கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியல் ஆகியவை நடைபெறும்.
இதற்கான முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 11 தமிழ்,
மார்ச் 16 ஆங்கிலம்,
மார்ச் 25 கணிதம்,
மார்ச் 30 அறிவியல்,
ஏப்ரல் 2 சமூக அறிவியல்,
ஏப்ரல் 6 விருப்ப மொழித் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை 27,783 தனித் தேர்வர்கள் உட்பட மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475(8,27,475) மாணவர்கள் எழுத உள்ளார்கள். அதே போன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 26 ஆயிரத்து 196(26,196) தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 9ஆயிரத்து இரண்டு (9,09,002) மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வுகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பள்ளி கல்வித்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. எனவே மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி தேர்வை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளும், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தி, அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது மேல்நிலைத் தேர்வுகளுக்கு 3,412 தேர்வு மையங்களிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகளுக்கு 2,615 தேர்வு மையங்களிலும் மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 4,219 தேர்வு மையங்களிலும் என மொத்தமாக 17,61,528 தேர்வர்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான பொது தேர்வினை எழுத உள்ளனர்.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது. பொது தேர்வுக்கு பின்பே தேர்தல் வருவதால் தேர்வு பணிகளில் ஆசிரியர் பணியாற்றுவதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்த பிறகே தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
+2 வகுப்பில் (Accountancy) தேர்வை எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்தலாம். “Ordinary Calculator without Programming” பயன்படுத்த அனுமதி
(Logarithmic books) பெரிய எழுத்துக்களுடன் A4 அளவில் வழங்கப்படும்
சொல்வதை எழுதுபவர்கள் சலுகையினைப் பயன்படுத்தும் தேர்வர்கள் ஒரு அறைக்கு 5 பேர் என ஒதுக்கப்படுவார்கள். அவர்களுக்கு 5 வினாத்தாள் கொண்ட வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்தாண்டு ஆசிரியர்களை முழுமையாக தேர்வு பணியில் ஈடுபடுத்தும் விதமான, சொல்வதை எழுதுபவர்கள் நியமங்களில் B.Ed.,/ DIET, கலை, பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆசிர்யர்களைத் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தனித்தேர்வர்களின் இருப்பிட முகவரியை உறுதி செய்யும் வகையிலும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கும் வகையிலும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் அவர்களின் மாவட்டங்களிலேயே தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவது உறுதி செய்யப்படுகிறது.