திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், ரெட்டியார்பட்டி மலைக்கு அருகில் ₹56.60 கோடி செலவில் 'பொருநை தொல்லியல் அருங்காட்சியகம்' கட்டப்பட்டுள்ளது. பழங்காலத் தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் சிறப்பையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உன்னத நோக்கில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், 54,000 சதுர அடி பரப்பில் பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் இது காட்சியளிக்கிறது.
இங்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியத் தொல்லியல் தளங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட அரிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொற்கை பகுதி 17,429 சதுர அடியிலும், ஆதிச்சநல்லூர் பகுதி 16,486 சதுர அடியிலும், சிவகளைப் பகுதி 8,991 சதுர அடியிலும் அமைக்கப்பட்டு, தமிழர்களின் வீரத்தையும் வணிகத்தையும் பறைசாற்றுகின்றன.
நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்வையாளர்களைக் கவரும் வகையில், இங்கு 5D மற்றும் 7D மெய்நிகர் யதார்த்த (Virtual Reality) திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பார்வையாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் அதிசயங்களைப் படகில் பயணித்து நேரில் காண்பது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெற முடியும். மேலும், அருங்காட்சியகத்தின் அறிமுகப் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் அபூர்வப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
வளாகத்தின் அழகைச் சேர்க்கும் வகையில் திறந்தவெளி அரங்கம் (Amphitheatre), வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்று, நீச்சல் குளம் மற்றும் பார்வையாளர்கள் இளைப்பாறத் திறந்தவெளி மண்டபம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க பேட்டரி மூலம் இயங்கும் வாகன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது வெறும் காட்சிக்கூடம் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்கிறது.
பார்வையாளர்களின் போக்குவரத்து வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தினமும் 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது விடுமுறை நாட்களில் வண்ணார்பேட்டை மற்றும் பாளையங்கோட்டை வழியாகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பண்டைய தமிழ் நாகரிகத்தின் பெருமைகளை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு கல்வி மையமாக இந்தப் பொருநை அருங்காட்சியகம் அமையும் என்பதில் ஐயமில்லை. இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், நெல்லை மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், வரலாற்றுத் தேடலுக்கான ஒரு சிறந்த களமாகவும் உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில் பொருநை அருங்காட்சியத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம். காலை 10 முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 எனவும் 5D, 7D தியேட்டருக்கு தலா ரூ.25 கட்டணம் எனவும் கூறப்பட்டுள்ளது.