சுடச்சுட சுண்டெலி வடை! பெரும் அதிர்ச்சியில் சிறுமி!

சுடச்சுட சுண்டெலி வடை! பெரும் அதிர்ச்சியில் சிறுமி!

டைகளில்  ஆமை வடை, மசால் வடை, பருப்பு வடை, கீரை வடை போன்ற  பலவகைகளைக் கேள்விப் பட்டுள்ளோம். ஆனால், சுண்டெலி வடையைக் கேள்விப்பட்டதுண்டா? சுடச்சுட பருப்பு வடையைப் பார்சல் செய்து வாங்கிய சிறுமி பசியுடன் அதைப் பிய்த்து சாப்பிடப்போகும்போது அதற்குள் கருகிய நிலையில் சுண்டெலியைக் கண்டால் அலறாமல் என்ன செய்வார்?

       திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் இருக்கும் ஒரு டீக்கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப்பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி வாங்கிச்சென்ற வடையில்தான் சுண்டெலி இருந்துள்ளது. அதைக் கண்டதும் அலறி அவள் தன் பெற்றோரை அழைத்துச் சொல்ல, அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அந்தக் கடைக்குச் சென்று கேட்க, அந்தக் கடை உரிமையாளர் தவறுக்கு வருந்தி, அரைத்து வைத்த மாவில் தவறுதலாக சுண்டெலி விழுந்து அதைக் கவனிக்காமல் பிசைந்து  வடையாக தட்டிப் போட்டிருக்கலாம்.  இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் எச்சரிக்கையாக இருப்பதாகவும், இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.  இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் அந்தக் கடைக்கு உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

       ந்நிகழ்வை வெறும் செய்தியாக மட்டும் நினைத்துக் கடந்து போவது நமது கடமையல்ல. இதுபோன்ற செய்திகளை அங்கும் இங்குமாக கேள்விப்பட்டும் நேரில் பார்த்தும் வருகிறோம். சில மாதங்களுக்கு முன் சேலத்தில் உள்ள பிரபலமான அசைவ உணவு விடுதியில் கெட்டுப்போன இறைச்சியில் பிரியாணி செய்யப்பட்டு இருந்தது, குளிர்பானத்தில் பல்லி, ஆணி போன்றவைகள் தென்பட்டன. இப்ப இப்படி, உணவு மீதான திடுக்கிடும்  பல சம்பவங்கள் நடந்துள்ளன.  நாம் உயிர் வாழத்தேவையான உணவுப்பொருட்கள்  தரமானதாக இருக்க வேண்டுமே தவிர நம் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் இருப்பது கண்டிக்கத்தக்கது.

       பாலில் நீர் மற்றும் சோயா பால், எண்ணையில் வனஸ்பதி, மிளகில் பப்பாளி விதைகள், தானியங்களில் கல் மண் போன்றவைகள் என்று உணவுப்பொருட்களில் உள்ள கலப்படங்களை அறிவோம். இப்படிக் கலப்படம் செய்வோர் மீது புகார்கள் வந்தால் உணவுப்பாதுகாப்புத் துறை அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து குற்றத்துக்குத் தகுந்தாற்போல் அபராதமோ அல்லது குடோன்கள் கடைக்கு சீலோ வைத்து பிரச்னையை முடிக்கின்றனர். விரைவில் அதிலிருந்து வெளிவந்து (அதை மறந்து) மீண்டும் சம்பந்தப்பட்டவர்கள் தொழிலையும் தொடங்கி விடுகின்றனர்.

ஆனால், நுகர்வோரின் கதி? தற்போது உருவாகும் உடல் நலக்குறைவுகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது வெளியில் உண்ணும் உணவுகள்தான். வயிற்றுப் பிரச்னைகள் முதல் உடல் உள்பாகங்கள் வரை கலப்படங்கள் மனிதரின் ஆரோக்கியத்தைச் சீரழித்து மருத்துவமனையை நாட வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் நம் சமையலறையில் உள்ள மளிகை பொருள்களில் பெரும்பாலும் ஐம்பது சதவீதமாவது நாம் அறியாத வகையில் கலப்படங்கள் கலந்திருக்கும் என்பதே உண்மை.

     மீண்டும் சுண்டெலி செய்திக்கு வருவோம். மற்றவை யெல்லாம் நாம் அறியாத வகையில் உயிருக்கு உலை வைக்கிறதென்றால் இதுபோன்ற சில கவனக் குறைவுகள் அறிந்தே நடைபெறுகின்றன. உணவு தயாரிக்கும் இடங்களில் எலிகளும் பல்லிகளும் உலாவக் கூடும்தான். முதற்கண் இதைக் கவனிக்க வேண்டும். உணவினைத் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? பசியைப் போக்கும் உன்னதமான தொழில் செய்பவர்கள் இனியாவது கவனமாக இருந்தால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்து, தங்களை நம்பி வருவோரின் உடல் நலனைக் காக்கும் மருத்துவர்களாக மாறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com