
நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரிப்பால் நகை என்பதை எட்டி பார்க்க கூட முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று நகை தான். முந்தைய காலம் முதலே தங்கத்திற்கு மதிப்பு அதிகம். அதனால் தான் வரதட்சணையாக தங்க நகை கொடுக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் மதுக்கடைகளுக்கு அடுத்தப்படியாக நகைகடைகளில் தான் கூட்டம் கூடுகிறது. அப்படி தங்கத்தின் மீதான ஈர்ப்பு யாரை தான் விட்டு வைத்தது. மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் இந்த பொக்கிஷம் மேலும் பெரிய பொக்கிஷமாகதான் மாறி வருகிறது. மதிப்பு குறைந்த பாடே இல்லை. எப்படியாவது தங்கம் வாங்கிவிடலாம் விலை அதிகரிப்பதற்குள் என்று மக்கள் நினைக்கும் நேரத்தில் அதை விட எட்டாக்கனியாக மாறிவிடுகிறது தங்கத்தின் விலை. இதனால் நகை வாங்கமுடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
அன்றைய காலத்தில் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பல சவரன் வாங்கிய பெண்களுக்கோ தற்போது ஜாக்பாட் தான். ஏனென்றால் அன்றைய காலத்து நகைகளை இன்றைக்கு விற்றால் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம். அந்த அளவிற்கு நகையின் விலை உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.70 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ரூ.65 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருந்த தங்கம் விலை தற்போது ரூ.68 ஆயிரத்தை தொட்டுவிட்டதால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏப்ரல் மாதம் தொடங்கிய முதல் நாளே இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த ஆண்டு வரை 60 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக சென்னையில் ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி, முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்தது.
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட, பிப்ரவரி ஒன்றாம் தேதி, ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 320 ரூபாயாக விலை உயர்ந்தது. பிப்ரவரி 11ஆம் தேதி முதல் முறையாக 64 ஆயிரத்து 480 ரூபாயாக உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. மார்ச் 14-ஆம் தேதியே 65 ஆயிரத்து 840 ரூபாயாகவும், மாலையில், 66 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 66 ஆயிரத்து 880 ரூபாயாக அதிகரித்தது. இப்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் மட்டும் 35 சதவீகிதம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அது ஒரு லட்சத்தை எட்டும் என்கின்றனர் தங்க விற்பனையாளர்கள்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 1) சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,510-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2025ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தங்கம் விலை மாற்றத்தின் வித்தியாசங்களை பார்க்கலாம் வாங்க..
ஜனவரி 22 2025 - ரூ.60,200
ஜனவரி 31 2025 - ரூ.61,840
பிப்ரவரி 1 2025 - ரூ.62,320
பிப்ரவரி 5 2025 - ரூ.63.240
பிப்ரவரி 11 2025 - ரூ.64,480
மார்ச் 14 2025 - ரூ.66,400
மார்ச் 31 2025 - ரூ.67,600
ஏப்ரல் 1 2025 (இன்று) - ரூ.68,080
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி கடந்த 3 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சராசரியாக சவரனுக்கு ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் சாமானிய மக்கள் நகையை பார்க்க முடியாத சூழலே உருவாகும் என சொல்லப்படுகிறது.