
சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகாலை முதலே பனி பொழிவதால் மக்கள் ஸ்வட்டர்களுடனே நடமாடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய உச்சத்தை தொட்ட தக்காளி விலை படிப்படியாக குறைந்து 1 கிலோ ரூ.5க்கு விற்பனையானது. அதன் பிறகு அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டு பிறகு குறைந்தது. ஆண்டு தோறும் மழை காலங்களில் வரத்து குறைவாகவே காணப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும், தற்போது தொடர் மழையால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
காய்கறி விலை:
ஒரு கிலோ தக்காளி ரூ.15 உயர்ந்து மொத்த விற்பனையில் ரூ.25க்கும், சில்லறை விற்பனையில் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், இன்று ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் ரூ.65க்கும், பீன்ஸ் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.