

நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அன்றாட பயன்பாட்டுக்கு இருக்கும் காய்கறிகளின் வரத்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 50 சதவீதமாக குறைந்து வருகிறது என்றும் ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் 5 முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது எனவும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் இன்னும் காய்கறிகளின் விலை கடுமையாக உயரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் கோடை வெயில் தாக்கம் காரணமாக, சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது என்றும் இதனால் காய்கறிகளின் மொத்த விலையும், சில்லறை விலையும் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உதாரணமாக தற்போது தக்காளி கிலோ ₹30 வரையும் , பீன்ஸ் கிலோ ₹80 வரையும் எலுமிச்சை கிலோ ₹180 வரையும் உயர்ந்துள்ளது. இதே போல் மற்ற காய்கறிகளும் தேவைக்கேற்ப விலை அதிகரித்துள்ளது.
சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் மட்டுமின்றி குறிப்பாக கோடைகால வெப்பம் மற்றும் சில பகுதிகளில் கோடை மழை பாதிப்புகளால் குறைந்து விளைச்சல் மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் இந்த விலையேற்றம் வந்துள்ளது.
தினசரி வரத்து கடந்த ஆண்டில் இதே கோடை காலத்தில் சுமார் 7,000 டன்னாக இருந்த நிலையில், தற்போது 3,500–4,000 டன் மட்டுமே வந்ததாக வியாபாரிகள் தெரிவித்த தகவல்கள் கூறுகின்றன. இதனால் அன்றாடத் தேவை மற்றும் விற்பனை வழங்கலில் சமநிலை பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் போர் சூழல் காரணமாக எரிவாயு பிரச்சினையால் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் உயர்ந்த காய்கறிகள் தற்போது மேலும் உயர்ந்து வருகிறது. கோடை காலத்தில் தாகம் தீர்க்கும் முக்கிய பழமாக விளங்கும் எலுமிச்சை ஒன்று தற்போது 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் பழச்சாறுகளின் விலையிலும் மாற்றம் வரலாம் என்கின்றனர்.
அதிக வெப்பத்தால் வாடிய காய்கறிகள் வரத்து குறைவால் சில்லறை சந்தைகளில் விலை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் ஹோட்டல்கள், உணவகங்கள், வீட்டு செலவுகள் என அனைத்திலும் இதன் தாக்கம் தெரியும். குடும்ப பட்ஜெட்டில் பற்றாக்குறை வரலாம்.
இந்த நிலை தொடருமா என்ற கவலை எழுகிறது. ஆனால் காய்கறிகள் வரத்து மீண்டும் அதிகரித்தால் அடுத்த சில வாரங்களில் விலை குறையலாம். ஆனால் வெப்ப அலை அல்லது மழை பாதிப்பு நீண்டால் மீண்டும் விலை உயர்வு தொடரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதற்கு ஒரே வழி நமது வீடுகளில் இருக்கும் இடங்களில் சிறு சிறு தோட்டங்கள் அமைத்து அதில் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்றவைகளை வளர்க்கலாம் என்கின்றனர் வீட்டில் செடிகளை வளர்ப்பவர்கள்.