உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் காய்கறி வியாபாரி ஒருவர், தக்காளி வாங்க வருபவர்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்து பேரம் பேசும்போது சண்டை போடுவதை தவிர்க்க கடையில் இரண்டு பாதுகாவலர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இப்போது ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விலை அதிகரித்துள்ளது. சாதாரணமாக கிலோ ரூ.20 அல்லது ரூ.30-க்கு விற்கப்படும் தக்காளி தற்போது கிலோ ரூ.100-க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஒரு கிலோ தக்காளி வாங்கியவர்கள் இப்போது விலை அதிகம் என்பதால் கால் கிலோ மட்டுமே வாங்கி வருகின்றனர்.
தக்காளி விலை உயர்வுக்கு இயற்கைச் சூழல்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. நாட்டில் ஒரு பகுதியில் தீவிர பருவமழையும், மற்றொரு பகுதியில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. குஜராத் பகுதியில் சமீபத்தில் வீசிய புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் சிலர் தக்காளிக்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக சொல்லபடுகிறது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. கர்நாடகத்தில் கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தக்காளி விலை கிலோ ரூ.130 ஆக உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தக்காளி விலையை கேட்டால் நீங்கள் மயங்கி விழுந்துவிடுவீர்கள். அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் தக்காளி வாங்குவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலம், வாராணசியில் காய்கறி வியாபாரியான அஜய் பாஃவ்ஜி தனது கடைக்கு இரண்டு பாதுகாவலர்களை நியமித்துள்ளார். தக்காளி விலையை கேட்டு வாங்குபவர்கள் சண்டைக்கு வந்துவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.
அஜய் பாஃவ்ஜி, சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் இவர், கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளை தக்காளி வடிவ கேக் வெட்டி கொண்டாடினார்.
தக்காளி விலை இப்போது வரலாறு காணாத அளவு விலை உயர்ந்து காணப்படுகிறது. எங்கள் கடையில் தக்காளி கிலோ ரூ.140 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது. தக்காளி வாங்கவரும் வாடிக்கையாளர்கள் பேரம் பேசும்போது கோபமடைந்து சண்டைக்கு வருகிறார்கள். இதற்கு முடிவு கட்டவே இரண்டு பாதுகாவலர்களை நியமித்துள்ளேன். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இவர்கள் பணியில் இருப்பார்கள் என்றார் அஜய் பாஃஜி. எனினும் அவர்களுக்கு ஊதியம் எவ்வளவு என்பதை அவர் தெரிவிக்கவில்லை. யாரும் சும்மா வேலைக்கு வரமாட்டார்கள் என்று மட்டும் பதில் கூறினார்.
இதனிடையே இது தொடர்பான செய்தியை தொடர்பு படுத்தி விடியோ வெளியிட்டுள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தக்காளி விலை இப்படியே தொடர்ந்தால் தக்காளிக்கு பா.ஜ.க. இஸட் பிளஸ் பாதுகாப்புதான் தர வேண்டும் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.