நாளை, ‘தமிழ்நாடு நாள்’: தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்!

நாளை, ‘தமிழ்நாடு நாள்’: தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்!

‘தமிழ்நாடு நாள்’ விழா நாளை செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாளை நடைபெறும், இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சிகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு நாள் ஜூலை 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு (2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. நடப்பு ஆண்டில் வரும் ஜூலை 18ம் தேதி அனைத்து மாவட்டங்களில், 'தமிழ்நாடு நாள்' குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

அதைப்போலவே, 'தமிழ்நாடு நாள்' குறித்த முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், இந்தச் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறும். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள். இந்த விழாவின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள் மாலை அணிவிப்பார்கள்.

இதனைத்தொடர்ந்து விழாவுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதில், ‘வளர்க தமிழ்நாடு’ என்னும் தலைப்பில் முனைவர் ராஜேந்திரன் பேச உள்ளார். அதைப்போலவே, ‘எழுக தமிழ்நாடு‘ என்னும் தலைப்பில் ஆழி செந்தில்நாதன் பேச உள்ளார். எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்யவேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com