தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சுப்பையா - நளினி தம்பதியரின் மகன் டி.எஸ்.சிவஞானம். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பி.எல். சட்டப் படிப்பும் படித்திருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கி இவர், சென்ற 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்ற டி.எஸ்.சிவஞானம், 2021ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பழைமையும் பெருமையும் வாய்ந்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று டி.எஸ்.சிவஞானம் பதவி ஏற்று இருக்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் ஆனந்த போஸ், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பீமன் பேனர்ஜி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பதவி ஏற்பு விழாவில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானத்தின் குடும்ப உறுப்பினர்கள், மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவுக்குப் பிறகு உரையாற்றிய தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், "மேற்கு வங்க மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியுடன் பாடுபடுவேன்" என தெரிவித்து இருக்கிறார்.