

திருப்பதி திருமலையில் ஜூன் மாதம் இறுதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் விஐபிகள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் துவங்கி உள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடைக்கால நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் மூலம் வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசனம் மே 1 முதல் ஜூன் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 3000-திற்கும் மேற்பட்ட விஐபி பிரேக் தரிசன அனுமதி மூலம் தரிசனம் செய்கின்றனர். இனி ஜூன் மாதம் இறுதி வரை விஐபி பிரேக் தரிசனம் இந்த காலகட்டத்தில் வழங்கப்படாது என்று அந்த அனுமதியை ரத்து செய்தது தேவஸ்தானம்.
நெறிமுறை சார்ந்த விவிஐபி-க்கள் மற்றும் அவர்களின் பரிந்துரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் பக்தர்களின் கூட்டத்தை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து, வெளியிலும் பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருக்கின்றனர். தர்ம தரிசனத்திற்கு 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 4 மணி நேரமும் ஆகிறது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதனால் கோடை காலம் முடியும் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அத்துடன் திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் வழங்குவதையும் ரத்து செய்வதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.