துருக்கி நிலநடுக்கம்: ஏழே வயதான அக்கா இடிபாடுகளில் சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் இந்த புகைப்படம் ஆன்லைனில் இதயங்களை உருக்குகிறது!

துருக்கி நிலநடுக்கம்: ஏழே வயதான அக்கா இடிபாடுகளில் சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் இந்த புகைப்படம் ஆன்லைனில் இதயங்களை உருக்குகிறது!
Updated on

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை அன்று, பசார்சிக் மாவட்டத்தில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கஹ்ராமன்மாராஸைத் தாக்கியது. காஜியான்டெப், சன்லியுர்ஃபா, தியர்பாகிர், அடானா, அதியமான், மாலத்யா, உஸ்மானியே, ஹடாய் மற்றும் கிலிஸ் உள்ளிட்ட பல மாகாணங்களைத் தாக்கியது.

கஹ்ரமன்மாராஸின் எல்பிஸ்தான் மாவட்டத்தில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லெபனான், சிரியா உள்ளிட்ட பல அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தின் பின்அதிர்வுகள் உணரப்பட்டது. பின்னர், மத்திய துருக்கியில் 6.0 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் இருந்து 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு இரு நாடுகளிலும் 7,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் நேரம் பார்க்காமல் போராடி வரும் நிலையில், ஒரு பெண் குழந்தை தனது சிறிய சகோதரனைப் பாதுகாக்கும், மனதை பிசையும், சகோதரபாசமிக்க புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இடிபாடுகளுக்குள் பெண் குழந்தை தனது சிறிய சகோதரனுடன் சிக்கியிருப்பதை புகைப்படம் காட்டுகிறது. மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கும் இந்த சிறுமி, தனது சிறிய சகோதரனைப் பாதுகாப்பதற்காக அவனது தலையில் கை வைத்துள்ளார். இருகுழந்தைகளும் 17 மணி நேரத்திற்கும் மேலாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த புகைப்படத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி முகமது சஃபா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “17 மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த 7 வயதுச் சிறுமி தனது சிறிய சகோதரனின் தலையில் கையை வைத்து அவனைப் பாதுகாத்து வந்தாள். இதுவரை இதை யாரும் பகிர்வதை நான் பார்க்கவில்லை. அவள் இறந்திருந்தால், அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள்! நேர்மறையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று சஃபா ட்வீட் செய்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com