

ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரசார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரசார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பனையூரில் நாளை (11.12.2025) விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு திருத்தப் பணிகள், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவத்துக்கு 72 நாட்கள் கழித்து, புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நேற்று தவெக பொதுக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், "மத்திய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். நமக்கு அப்படி இல்லை. தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான், நாமெல்லாம் சொந்தம்தான்" என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாமல், உலகின் எந்த மூலையில் உள்ள 'நம் வகையறாக்கள்' இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம் உயிர்தான், நம் உறவுதான் என்றும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த விஜய், 1977-ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே, 1974-ல் புதுச்சேரியில்தான் அதிமுக ஆட்சி அமைத்தது. "எம்.ஜி.ஆர். நமக்காக அரசியலுக்கு வந்தார். அவரை மிஸ் பண்ணிடாதீர்கள் என 'அலர்ட்' செய்தது புதுச்சேரி மண் தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மக்களும் தன்னை 30 ஆண்டுகளாகத் தாங்கிப் பிடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தான் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் புதுச்சேரி மண்ணுக்கும் சேர்த்துத்தான் குரல் கொடுப்பேன் என்றும், அது தன் கடமை என்றும் வலியுறுத்தினார்.