

தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் ஆட்சியைக் கைப்பிடிக்கும் நோக்கில் நடைபெறப் போகும் சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு நேரடியாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஒருவர் மீதான ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் அந்த வகையில் துவக்க முதலே தவெக கட்சியின் தலைவர் தனது எதிரி தீய சக்தியான திமுக தான் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இன்று விஜய் தனது எக்ஸ் தளத்தில் 'தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா' என்று கேட்டு திமுகவின் மீது குற்றச்சாட்டினை அடுக்கி உள்ளார்.
"தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? " என்று தனது எக்ஸ் தளத்தில் திமுக வின் மீது கேள்விக்கணையை வீசி உள்ளார் தவெக தலைவர் விஜய். மக்கள் கவனத்தை கவரும் வகையில் சதுரங்க வேட்டை எனும் திரைப்படத்தில் வரும் ஏமாற்று வேலைகளை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த பதிவில்,
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?
உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா?
மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.