

முதல்வர் விஜய் சட்டமன்ற கூட்டத்தொடரில், திமுக தலைவர் ஸ்டாலினின் மிசா சிறை வாசத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள், திமுகவினர் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடுமையான எதிர்வினைகளை திமுகவினர் ஆற்றி வருகின்றனர். இன்று மாநிலம் முழுக்க பல இடங்களில் முதல்வர் விஜயின் பேச்சை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் தவெகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.
திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் நிர்மல் குமாரை விமர்சித்திருந்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , தவெகவையும் முதல்வர் விஜய்யும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பல திமுக தலைவர்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் , தவெக சார்பில் தற்போது பதிலடிகளை தொடங்கியுள்ளனர் . அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் , தனது X தளத்தில் திமுகவிற்கு தனது பதிலடியை கொடுத்துள்ளார், மிகவும் குறிப்பாக சேகர் பாபு பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். அவரது பதிவில்.
"ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை.
குறிப்பாக, இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது.
அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது.
எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை.
ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது.
எனவே, வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.
அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் ஆனால் அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும்" என்று ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் , திமுகவிற்கு தனது பதிலடி வழங்கினார். "திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை, அதனால் அவரை மீண்டும் மீண்டும் தியாகியாக சித்தரிப்பதில் பலனில்லை. எழும்பூரில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த பரந்தாமனை, மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராக்கியுள்ளனர். அவர் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறப் போவதில்லை" , என்று கூறியுள்ளார். திமுக - தவெக இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.