

நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக என்ற மாபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, மக்களின் அமோக ஆதரவை பெற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தவெக கட்சியை சேர்ந்த ஜே.காமாட்சி ஜெயகிருஷ்ணன் (J. Kamatchi) என்பவர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1,33,611 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் டி.முருகேசனை 54,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆவார். இவர் 1 லட்சத்து 33 ஆயிரத்து 611 வாக்குகளை பெற்றிருந்தார். தவெக சார்பில் வெற்றிபெற்ற 13 பெண் எம்எல்ஏக்களில் ஒருவரான இவர், இத்தொகுதியில் வென்ற முதல் பெண் எம்எல்ஏ என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.
இதற்கிடையே எம்எல்ஏ ஜே.காமாட்சி 'Q.R.CODE' அடங்கிய ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார். பல்லாவரம் பகுதியில் வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் நேரடியாக புகார் அளிக்க முடியாதவர்கள் இந்த ‘QR.CODE’ஐ ஸ்கான் செய்தால் அதில் வரும் புகார் மனுவில் மக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தற்போது 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் அவைகள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பின்பு பேட்டி அளித்த அவர், இப்பொழுதான் புதிய ஆட்சி அமைந்துள்ளது. எனவே பல்லாவரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளை சீர் செய்வதற்கு சிறிது காலதாமதமாகும். முக்கியமாக இன்னும் ஆறுமாதங்களில் மழை காலம் என்பதால் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பை குவியல்கள் நிரந்தரமாக அகற்றப்பட்டு மழை நீர் வடிகால் முழுவதுமாக கட்டி முடிக்கப்படும். மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்வதே என்னுடைய முக்கியமான நோக்கம். மேலும், பாதாள சாக்கடையில் தேங்கி உள்ள குப்பைகளால் தான் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி வருகிறது. அவைகளை முறையாக அகற்றி மூடி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.